சிந்துக்குத் தந்தை
வானத்து நீலம் வழித்தெடுத்து- அதை
வாரிதித் தண்புனல் தோய்த்தெடுத்து
தேனைக் கடைந்து திதிப்பெடுத்து- வீசும்
தென்றல் இதழின் சுவைவடித்து
யானையின் பார்வை அளவெடுத்து - உளம்
ஆர்க்கும் உணர்வுத் தினவெடுத்துக்
கானம் குழைத்துக் கனல்தொடுத்துத் - தமிழ்
கவிதை படைத்தனன் பாரதியே!
எது, பெரிய புலவர்களால் இலக்கியத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்டதோ, எது எந்த ஒரு ஒழுங்குமின்றிக் கல்லாதவர்களாலும் கையாளப்பட்டதோ, எது நாட்டுப்புற மக்களின் பாட்டாகத் திகழ்ந்து உள்ளங் கவர்ந்தாலும் பெரிய இடங்களில் பிந்திப்போனதோ அந்தச் சிந்து இலக்கியத்திற்குப் புத்துயிர் கொடுத்து உலாவவிட்ட உயர்வு மகாகவி சுப்ரமண்ய பாரதியையே சாரும். அவருக்கு முன்னாலே சித்தர் இலக்கியங்களிலும், கும்மிப்பாடல்களிலும், வள்ளலாரின் ஒரு சில பாடல்களிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும், , குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களிலும் பயன்படுத்தப் பட்ட சிந்துப் பாடல்களை முறைப்படுத்தி அவற்றைக் காவிய அந்தஸ்துக்கு உயர்த்தி , சிந்துக்கு மட்டுமன்றி தமிழுக்கும் மறுமலர்ச்சி அளித்த பெருமை பாரதியாரையே சாரும். .எனவே தான் பாரதியைச்”சிந்துக்குத் தந்தை’ என்று போற்றினார் பாவேந்தர் பாரதிதாசன்.
பாரதி ஒரு மாமேதை! எட்டையபுரத்தில் சிறுவனாக இருந்த போதே இலக்கணச் சிங்கங்கள் என்று கருதப்பட்ட புலவர்களுக்கு ஈடுகொடுத்துச் செய்யுள் இயற்றியவர் பாரதி.. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் முதல் பாடல்
“எட்டயபுர மன்னருக்கு விண்ணப்பம்” பாரதியின் 15வயதில்(24-1-1897) எழுதப்பட்டது. அந்த அகவற்பாவில் அந்தக் கால இலக்கணப்புலவர்கள் வேண்டுமென்றே அதிகம் பயன்படுத்தும் அளபெடையை ஏழு இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அது தவிர தேர்ந்த புலவர்களால் ஆசிரியப்பாவில் பயன்படுத்தப்படும்’கூன்’ என்ற தனிச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.. அந்தக் காலத்திலேயே யமகம், காவடிச் சிந்து போன்ற பாடல்வகைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்திற்கு இணையாக அமைந்திருக்கிறது என்று புலவர்களால் பாராட்டப்பட்ட பாடல் பாரதி எட்டையாபுரத்தில் இருந்த போது எழுதப்பட்டதுதான். அந்தக் காலத்தில் சமுசை கொடுத்துப்பாடுவது என்பது புலவர்களிடை ஒரு வழக்கமாக இருந்தது. தமது திறமையை வெளிக்காட்டப் புலவர்கள் மிக விருப்பத்தோடு அந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதுண்டு. இளம்வயதிலேயே அப்பட்டிப்பட்ட போட்டிகளில் மூத்த புலவர்களையும் வென்றிருந்த பாரதிமேல் பொறாமைகொண்டு, சோணாசலம்பிள்ளை என்ற சிறந்த தமிழ் புலவரின் மகனும் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றவருமான காந்திமதி நாத பிள்ளை என்பவர் கொடுத்த பாரதி சின்னப் பயல் என்ற ஈற்றடிக்குப் பாரதி உடனடியாக எழுதிய பாடல் மிகவும் பிரசித்தமானது. காந்திமதிநாத பிள்ளையை வெட்கித் தலைகுனியச் செய்தது. பிள்ளையையே சின்னப்பயலாகச் சித்தரித்த அந்தப் பாடலைச் சற்றே மாற்றித் தன்னிலும் மூத்தவரான காந்திமாதிநாதனுக்கு உயர்வு கொடுத்த சாமர்த்தியத்தை என்னென்று சொல்வது?
இப்படியெல்லாம் அந்தக் கால மரபை ஒட்டியும் எட்டையபுர அரண்மனையில் இருந்த புலவர்களின் சமத்காரத்திற்கேற்பவும் பாடல் எழுதிய பாரதி அம்மரபிலும் புதுமை செய்ய விழைந்தார். ஆங்கிலம் அறிந்த அவர் ஆங்கில இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்த சானட் என்னும் 14 வரிப்பாடலைத் தமிழில் முயன்றிருக்கிறார். அப்படி அமைந்த பாடல்தான் 1904ம் ஆண்டு விவேகபாநு பத்திரிகையில் பாரதி எழுதிய தனிமை இரக்கம் என்ற பாடல். 14 அடிகள் கொண்ட அவ்வமைப்பில். முதல் எட்டு வரிகள் சொல்லவரும் கருத்தின் ஒரு நிலையையும் அடுத்த ஆறு அடிகள் அதன் வேறுநிலையையும் குறிக்கும். .அந்த வகையில் தனிமையிரக்கம் பாடலில் முதல் எட்டு வரிகள் பிரிவின் ஆற்றாமையையும் அடுத்த ஆறுவரிகள் முடம்படு தினங்களை நோக்கிப் பேசுவதையும் சித்திரமாகத் தீட்டுகின்றன.
வங்கமே வாழிய என்ற பாடல் பாரதியால் 14-9-1905ம் ஆண்டு எழுதப்பட்டது. இந்த பாடல் கட்டளைக் கலிப்பா என்னும் வகையைச் சார்ந்தது. எழுத்தென்ணிக்கைக்கு உட்பட்டது. நேரசையில் தொடங்கினால் அடிக்குப் பதினோரு எழுத்துகளும்ம் நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் பன்னிரண்டு எழுத்துகளும் (மெய்யெழுத்தை விட்டுவிட்டு எண்ணவேண்டும்)அமையவேண்டும். அந்த இலக்கணத்திற்கு ஏற்ப மிக அற்புதமாக அமைந்திருக்கிறது அந்தப்பாடல்..
இவற்றை எல்லாம் கூறக் காரணம், பாரதி தனது இளம் வயதிலேயே இலக்கணத்தில் அபாரத் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதையும் பின்னாளில் எவரும் அவருக்கு இலக்கணம் கற்றுக் கொடுக்கவேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது என்பதையும் சுட்டிக்காட்டவும்தான் .
நெல்லை மாவட்டம் இலக்கியத்திற்குப் புகழ் பெற்றது. கிராமப்புறங்களில் நடைபெறும் கோலாட்டம் கும்மி நிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம்,
கணியான் கூத்து, தெருக்கூத்து போன்றவை சின்ன வயதுப் பாரதியை ஈர்த்திருக்க வேண்டும். வீரமாமுனிவர்” சிந்து மிக மட்டமான பாவகை என்று புலவர்கள் அதனை ஓதுவதை மதிப்புக் குறைவாக எண்ணுகின்றனர்” என்று எழுதியுள்ளார். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தைத் தவிர வேறு சிந்துப்பாடல்கள் இலக்கியத் தரமற்றவை என்று கருதிய புலவர்கள் மத்தியிலே பாரதி தனது மனத்துக்குப் பிடித்த சிந்துப்பாடல்களில் கவிதை எழுத முயலவில்லை.. ஆனால் எட்டயபுரம் அரண்மனை என்ற தளையிலிருந்து விடுபட்ட பிறகு பாரதியின் நாட்டம் சிந்துப் பாடல்களின் பக்கம் திரும்பியது.
அவர் போட்டிக்காக எழுதிய காவடிசிந்துப் பாடலை தவிர்த்து, முறையாக அவர் முதன்முதல் எழுதிய சிந்துப்பாடல் வந்தேமாதரம் என்போம் என்ற பாடல் தான். தாயுமானவரின் ஆனந்தக்களிப்பு வர்ண மெட்டில் எழுதப்பட்டது. அதற்கு முன் கடுவெளிச்சித்தர் எழுதிய நந்தவனத்திலோர் ஆண்டி” என்ற புகழ்பெற்ற பாடலும் இவ்வகையைச் சேர்ந்ததே.
சிந்துப்பாக்களிலே எத்தனையோ வகைகள் உண்டு.
அகப்பேய்ச் சிந்து, கிளிக்கண்ணி, , குதம்பைச் சிந்து, ஆனந்தக்களிப்பு, பள்ளு, குறவஞ்சி, நொண்டிச் சிந்து,காவடிச் சிந்து, வழிநடைச் சிந்து, வளையற்சிந்து, தென்பாங்கு, இலாவணி,, ஒயிற்கும்மி, இரட்டைக் கும்மி, ஏற்றப்பாட்டு, வள்ளைப்பாட்டு என இன்னும் பல.
இவ்றைப்பயன் படுத்திப் பல சிந்து இலக்கியங்கள் தோன்றியுள்ளன, சித்தர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள் , வள்ளலார் பாடல்கள் போன்ற சிலவற்றைத்தவிர மற்றச் சிந்திலக்கியங்கள் எந்தக்கட்டுக்கோப்பும் இன்றி அமைந்திருந்தன. மகாகவி பாரதி அப்படியிருந்த சிந்துகளையெல்லாம் திரட்டி முறைப்படுத்தி தமது கவிதைகளில் பயன்படுத்தினார்.
பாரதியார் தன் மனத்தைக் கவர்ந்த இசையைக் குயில் பாடில் குயிலின் வாயிலாகப் பட்டியலிடுகிறார்.
“
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணமிடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சம் பறிகொடுத்தேன் “
மக்களுக்குச் சுதந்திர உணர்ச்சியை ஊட்டவேண்டுமென்றால் அவர்கள் பழகுகிற பாட்டின்வழியே உணர்ச்சி ஊட்டுவதே சிறந்தது என்பதை உணர்ந்த பாரதியார் தனது கவிதைகளுக்கு நிலைக்களமாய்ச் சிந்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்தார்.
பாஞ்சாலி சபதம் காவியத்தில் பெரும்பகுதி சிந்துப்பாடல்களே!
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்” அப்படிப் புதிய உயிர் தரும் பொறுப்பைப் பாரதி தானே ஏற்றுக்கொண்டார்.
பாஞ்சாலிசபதம் தவிர்த்து மீதமுள்ள 247 பாடல்களில் 116 பாடல்கள் சிந்துப்பாடல்கள். ஒவ்வொரு சிந்துப்பாடலிலும் வரும் சிந்துக் கண்ணிகளைக் கூட்டிக்கணக்கெடுத்தால் 955 கவிதைப் பகுதிகள் வருகின்றன.
இனி, பாரதி எழுதியுள்ள சில சிந்து வகைகளைக் காணலாம்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையிலேதான் இங்கே கொடுக்கப்படுகிறது.
கிளிக்கண்ணி- - நெஞ்சில் உரமுமின்றி, திருவைப் பணிந்து நித்தம்
நொண்டிச் சிந்து- நெஞ்சு பொறுக்குதில்லையே, ஓமெனப் பெரியோர்கள்(பாஞ்சாலி சபதம்)
ஆனந்தக் களிப்பு- வந்தே மாதரம் என்போம், தாயின் மணிக்கொடி
இருசீர்ச்சமநிலை- சின்னஞ்சிறுகிளியே, மோகத்தைக் கொன்றுவிடு, செருப்புக்குத் தோல்வாங்கியே, சூதர் மனைகளிலே, தனிமை கண்டதுண்டு.
முச்சீர்ச் சமநிலை- பேயவள் காண் எங்கள் அன்னை, ஓடி விளையாடு பாப்பா
நாற்சீர் சமநிலை- கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்
ஐஞ்சீர்ச் சமநிலை- உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பரோ மாயையே,
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை, காயிலே புளிப்ப தென்ன
அறுசீர்ச் சமநிலை- எல்லா மாகிக் கலந்து, ஆயிரம் தெய்வங்கள், கண்ணில் தெரியும் பொருளினை
எழுசீர்ச் சமநிலை- வெள்ளை நிலா விங்கு வானத்தை மூடி விரிந்து பொழிவது கண்டாய்
காவடிச்சிது- காலமாம் வனத்தில்,
பள்ளு- ஆடுவோமே
வியனிலைச் சிந்து- திருதராஷ்ட்ரன் செவியில், வீமனெழுந்துரை செய்வான், நல்லதோர் வீணை செய்து , பிள்ளைப் பிராயத்திலே, நிற்பதுவே நடப்பதுவே, , கரும்புத் தோட்டத்திலே
விண்ணவராணை” உண்ண உண்ணத் தெவிட்டாதே, தின்னப் பழங்கொண்டு, காலா உன்னை ஒரு புல்லென
புதிய மூவடிச் சிந்து- காதல் காதல் காதல்
வியனிலை முடுகு- வெட்டி யடிக்குது மின்னல்
தனிச்சொல் இல்லாச் சமநிலை- பாயுமொளி
கும்மி- கும்மியடி தமிழ் நாடு முழுதும், செந்தமிழ் நாடெனும்
புதிய உத்தி- 1 இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
ஈற்றடி தவிர அனைத்து அடிகளிலும் தனிச் சொல்- திருவே நினைக் காதல் கொண்டேனே
புதிய உத்தி 2- உலகத்து நாயகியே
புதிய த்தி 3- வெடிபடு மண்டத் திடிபல
புதிய உத்தி 4- ஞானத்திலே பர மோனத்திலே
மானத்திலே அன்ன தானத்திலே
சீரெதுகைச் சிந்து- நாடித் தவம் புரிந்து- பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு- கூடக் கருது மொளி
புதிய உத்தி-4 கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதிய உத்தி 5 ஆவியினுள்ளும் அறிவினிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம்- விண்ணின்
ஆசைவளர்த்திடுவோம்-களி
ஆவல் வளர்த்திடுவோம்
சிந்துப்பாடல்களுக்குப் புதிய இலக்கணம் வகுத்த டாக்டர் திருமுருகன் அவர்களின் அமைப்பின் படி பாரதியின் சிந்துப்பாடல்கள் இசையின் தாளகதிக்கேற்ப மிக அற்புதமாக நடப்பதைக் காணமுடியும். வெண்டளை பிறழாத சிந்துப்பாடல்கள் பலவற்றையும் பாரதியார் பாடியிருக்கிறார். அந்தக்கால சிந்து இலக்கியங்களின் பெரும்பாலானவை கண்ணிகளாக அமைந்துள்ளன. பாரதி எழுதியுள்ள கண்ணிகளையும் சேர்த்தால் அவர் இயற்றியிருக்கும் சிந்துப்பாடல்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். பாரதியின் சிந்துப்பாடல்கள்தாம் பிறகாலக் கவிஞர்களுக்குச் சரியான வழிகாட்டிகளாக அமைந்தன. அவற்றின் தாக்கத்தை த் திரைப்படப் பாடல்களிலும் காணலாம்.
பாரதி வந்து
மறுமலர்ச்சி தந்ததால்
சிறப்பாக வாழ்கிறது
சிந்து!
கவிமாமணி இலந்தை சு இராமசாமி